புழுதியும், தூசியும் படிந்து உப்பிப்போன தலைமுடி, காதின் இடுக்கில் சொருகி இருக்கும் சிகெரெட் துண்டு, தடித்த கீழுதடு, அதை எப்போதும் அழுத்தியபடி இருக்கும் தெற்றுப்பல் வரிசை, சாலையிலே படுத்துக்கிடந்ததாலும் , பல நாட்கள் தண்ணீரையே காட்டததாலும் முகமெங்கும் கருப்பாய் அப்பிப்போன அழுக்குத்தீற்றல்கள்.
ஆப்பிரிக்காவின் பஞ்ச தேசங்களை நினைவூட்டும் தேகம். அணிந்திருந்த ஆடையில் அங்கங்கே கிழிசல்களில் ரத்தம் வெளிவந்ததும், தோல் உரிந்து போனதுமாய் சில காயங்கள்.
அக்குளில் எப்போதும் சிறைபட்டிருக்கும் நைந்துபோன பை, காகிதங்களும், ஒன்றிரண்டு ஆடைகளும், இப்பூவுலக ஜீவிதத்துக்கு உதவாதவை என்று தூக்கியெறியப்பட்ட பலவும் அந்தப் பையினுள் அடக்கம்.
கால்களை ஒடுக்கி, அக்குள் பையை சுருட்டி அணைத்தவாறு புரியாத மொழியில் தம் கட்டி உளறிக்கொண்டிருக்கும் அவனைக் கடந்து செல்கிறவர்கள் மூக்கைப் பொத்திக் கொள்கிறார்களோ இல்லையோ, தவறி மனிதனாய்ப் பிறந்துவிட்ட விசித்திர ஜந்துவோ என்பதுபோல ஒரு பார்வையை வீசிச் செல்வது மட்டும் வழக்கம்.
இந்த ஜீவராசியைப் பற்றி சொல்லிவிட்டு அவன் உடமைகளோடு உடமையாக கூடவே இருக்கும் இன்னொரு உயிரைப் பற்றிச் சொல்லாவிட்டால் நட்பைப் பழித்த பாவம் வந்து சேரும். டீக்கடை பாய் சொல்லித்தான் இந்த நட்பின் கதை எனக்குத் தெரியும்.
ரெண்டு வருஷத்துக்கு முன்ன மெத்ராஸில பேய் மழை அடிச்சுச்சு தம்பி, அப்போ அது ரொம்ப சின்னது... பொறந்து ஒரு பத்து நாள்தான் ஆகியிருக்கும். எங்கியோ இருந்து மழைத்தண்ணியில அடிச்சிக்கிட்டு வந்துருச்சு. அப்போ "சாங்கி" (தொடக்கத்தில் பெரிதாக வர்ணிக்கப்பட்ட ஜீவராசியின் திருநாமம்) நம்ம சேட்டுக்கடை இடுக்குலதான் ஒண்டிக்கிட்டு இருந்துது. கொஞ்சம் விட்டுருந்தா ஆளையே விழுங்குற சாக்கடைக் குழிக்குள்ள போயிருக்கும். அதுதான் தூக்கி விட்டுச்சு. அப்போருந்து ரெண்டும் ஒண்ணுமன்னாத்தான் இருக்கு. புத்தி சுவாதீனமில்லேன்னாலும் அதுங்க ரெண்டுக்குள்ளே இருக்குற பாசத்தைப் பாக்கனுமே.
இப்பொழுதெல்லாம் சிகரெட் பிடிக்க பாய் கடைக்குச் செல்லும்போது அந்த ஜீவன்கள் இருக்கும் இடத்தைப் பார்ப்பது தவிர்க்க முடியாமல் ஆகிவிட்டிருந்தது.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கே உரிய முகச்சாயலைக் கொண்டிருந்த அவன் இதுவரையில் கை நீட்டி பிச்சை கேட்டு நான் பார்த்ததில்லை. அது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.
பாய் தினந்தவறாமல் கொடுக்கும் டீயும், மீந்து போன வடைகளும், சாந்தி மெஸ்ஸின் மிச்சங்களும்தான் இந்த இரண்டு உயிர்களின் உணவுப்பாட்டைத் தீர்க்கும் முக்கியக் காரணிகள்.
இரண்டறக் கலந்தது போல் அந்த நாயோடு உட்கார்ந்து, உச்சுக் கொட்டிக் கொண்டு, உரக்க பேசியபடியே சாந்தி மெஸ்ஸின் மிச்சங்களை சாப்பிடும்போது, அந்த சாப்பாட்டின் லட்சணத்தை நாயிடம் சொல்லி குறைபட்டுக் கொள்வதாகவே எனக்குத் தோன்றும்.
அன்றும் பாய் கடையில் நின்று வழக்கம்போல் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். பையினுள் ஆழமாக கையைவிட்டுத் தேடியபடியே சாங்கி கடையை நோக்கி வந்துகொண்டிருந்தது. காலிலே ஒன்றிரண்டு காயங்கள் புதிதாகத் தெரிந்தன.
பைக்குள் இருந்த டம்ளரை எடுத்து பாயிடம் நீட்ட, டீ போட்டுக் கொண்டுவர அவர் உள்ளே போனார். நான் கண்களை அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான் பார்ப்பதை கவனித்ததும் கழுத்தை உள்ளிழுத்து சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு பின் வெகுளியாக சிரித்தது. அடிக்கடி பார்க்கிற ஒரு விஷயந்தான் என்றாலும் அன்று எனக்கு என்னவோ செய்தது. டீயை வாங்கிக்கொண்டு திரும்பும்போது மறுபடியும் ஒருமுறை கழுத்தை உள்ளிழுத்து, என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சென்றது.
எனது ரூமில் சில பழைய சட்டைகள் கிடந்ததே!. இதற்கு கொடுக்கலாமா? கொடுத்தால் வாங்கிக் கொள்ளுமா..? தயக்கமாகத்தான் இருந்தது. மாலையில் வேலை முடிந்து திரும்பியதும் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தபடி கிளம்பினேன்.
எங்கள் இழவெடுத்த ஆபீஸில் மாதம் ஒருமுறை வந்து தொலைக்கும் அதே வேலை. தேங்கிவிட்ட பையில்களை எல்லாம் முடித்து நாளைப் பொழுதுக்குள் ஹெட் ஆபிசுக்கு அனுப்பியாக வேண்டும். இரவு வெகுநேரம் வரை வேலை செய்துவிட்டு, அங்கேயே தூங்கி காலையில் குளித்துத் தயாராகி மறுநாள் வேலையையும் பார்த்துவிட்டு வந்தேன். எங்கள் ஆபீஸில் தூங்க, குளிக்க என எல்லா வசதிகளும் இருந்தன. வேலை செய்பவர்கள் வீட்டுக்குச் சென்றுவரும் நேரத்தைக் கூட உறிஞ்சத் துடிக்கும் நல்லிதயம் எங்கள் மேலதிகாரிகளுக்கு.
உடை மாற்றிக் கொண்டு பாய் கடைக்கு வந்த பொழுது, வழக்கமான இடத்தில் சாங்கியைக் காணவில்லை. நாய் மட்டும் சுருண்டு படுத்துக் கிடந்தது. ஆர்வத்தில் பாயிடம் கேட்டேன்.
அட, என்னன்னு சொல்ல தம்பி!.., அந்த சேட்டுக்குதான் இதுகளக் கண்டாலே ஆகாதே!.. அவன் கடை சந்துல அண்டாதீங்கன்னு வெரட்டிக்கிட்டே இருப்பான். இதுகள விரட்டுறதுக்குன்னே தனியா குச்சி வேற!.. இதுகளாவது வேற எங்காவது போயி தொலையலாமில்ல?.. நேத்து கடைக்கு வந்தவுங்கள சாங்கி வழக்கம் போல உத்துப் பாத்திருப்பான் போல. அதப்பாத்து வந்தவங்க மெரண்டு சேட்டுகிட்ட சொல்ல, அவன் குச்சியத் தூக்கிட்டு அடிக்க வந்துட்டான். ஓங்குன கைய நாய் கப்புனு பாய்ஞ்சு பதம் பாத்துடுச்சு. சேட்டுக்கு வந்த கோவத்துல சாங்கிய எட்டி இடுப்புல மிதிச்சுட்டான். அப்ப அலறிகிட்டு ஓடுனதுதான். இன்னமும் வரக் காணோம். நாய் மட்டும் இங்கியே படுத்திருக்கு.
திரும்பி நாயைப் பார்த்தேன். அது இன்னும் சுருண்டு உடம்பை ஒடுக்கிக் கொண்டது.
அதிகப்படியான வேலைப் பழுவினால் இரண்டு, மூன்று நாட்களாக பாய் கடைக்குப் போக முடியவில்லை. இன்று போயிருந்த பொழுது தற்செயலாக என் பார்வை சாங்கியின் இருப்பிடம் நோக்கிச் சென்றது.
அங்கே தலையை ஆட்டி, ஆட்டி நாயிடம் உரக்கப் பேசிக் கொண்டிருந்த சாங்கியைப் பார்த்தும், பழைய நண்பனை பலநாள் கழித்துப் பார்த்துவிட்ட ஒரு சந்தோஷம் எனக்குள். மூச்சுக் குழாயில் காற்றுப் பந்து ஒன்று அடைக்க என்னையும் அறியாமல் சந்தோஷத்தில் எனது கண்களில் நீர் திரண்டிருந்தது.
உடனே ஓடிபோய் ரூமில் இருந்த பழைய சட்டைகள் இரண்டைக் கொண்டுவந்து சாங்கியிடம் நீட்டினேன். தனது நாயோடு வார்த்தையாடுவதற்கு இடைஞ்சலாக வந்த என்னை, தலையைத் தூக்கி உற்றுப் பார்த்தது. சிறிது நேரமான பின்பும் சட்டைகளை வாங்காததால், எனது தயக்கம் அதிகமானது. நீட்டிய கை நீட்டிய படியே இருக்க, எச்சில் விழுங்கினேன். மீண்டும் ஒருமுறை கழுத்தை உள்ளிழுத்து, என்னை உற்றுப் பார்த்துவிட்டு மெல்ல கையை நீட்டி சட்டைகளை வாங்கிக் கொண்டது.
அவைகளை உருட்டியும், திருப்பியும் பார்த்துவிட்டு, என்னைப் பார்த்து வெகுளியாய் சிரித்தது.
சட்டைகளை நன்றாக சுருட்டி, அதன் பையில் திணித்துக் கொண்டது. போட்டுக் கொள்ளும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு வேறு ஏதோ எண்ணங்கள் போல. மீண்டும் நாயிடம் உரக்கப் பேச ஆரம்பித்துவிட்டது. நான் மெல்ல அங்கிருந்து நகர்ந்தேன். அதன்பிறகு நான் ஒவ்வொரு முறை பாய் கடைக்குப் போகும்போதும், வழக்கமாகப் பார்க்கும் என் பார்வையில், இன்றாவது நான் கொடுத்த சட்டைகளில் ஒன்றைப் போட்டுக் கொண்டிருக்காதா என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்து கொண்டது.
பல நாட்கள் கடந்து விட்டது. ஆபீஸில் இருக்கும்போது கூட ஓரிரு முறை சாங்கியைப் பற்றியும் சட்டைகளைப் பற்றியும் ஞாபகம் வந்தது.
இன்று கடைக்குப் போகும்போது, ரோட்டின் நடுவே ரத்தம் உறைந்தும், உறையாமலும் குளம்போல படிந்திருந்தது. இரண்டு பக்கங்களிலும் வண்டிச் சக்கரங்கள் பதித்துப் போன ரத்தத் தடங்கள் இன்னும் அருவருப்பைக் கூட்டியது. நாய் எதாவது அடிபட்டிருக்கும் என்று யதார்த்தமாக தோன்றியவுடன் எனக்கு திக்கென்று சாங்கியின் நாய்தான் ஞாபகத்திற்கு வந்தது. ஓடிச் சென்று பார்த்தேன். நாய் வழக்கமான இடத்தில் படுத்திருக்க, அதன் அருகிலேயே சாங்கியின் பையும் கிடந்தது. சாங்கியைக் காணவில்லை.
வந்து பாயிடம் விசாரித்தேன்.
வந்து பாயிடம் விசாரித்தேன்.
என்ன பாய் ஆச்சு..? ரோடெல்லாம் ரத்தக் கறையா இருக்கு..?
ஹூம்... யாரு பெத்த புள்ளையோ, இங்க வந்து அடிபட்டு சாகனும்னு இருக்கு.
யாருக்கு என்ன ஆச்சு பாய்..?! எனக்கு திக்..திக்கென்று அடித்துக் கொண்டது.
நேத்து ராத்திரி, கலியாணக் கோஷ்டிங்க, மிச்சத்தைக் கொட்டுறதுக்கு வந்திருக்காங்க. அதுல ஒரு பொட்டலம் ரோட்டுலயே விழ, நம்ம சாங்கி போயி அதை எடுத்துப் பார்த்திருக்கு. திங்கற பொருள்தானே!.. நடுரோடுன்னு கூடத் தெரியாம அங்கியே உக்காந்து திங்க ஆரம்பிச்சுடுச்சாம். நம்ம பக்கத்து அப்பார்ட்மெண்டு வாட்சுமேன் ஒருபாடு கத்திப் பார்த்திருக்காரு. ம்ஹூம்.. நகரவே இல்ல!.. ஏதோ கடங்காரப் பாவி நைட்டுதானேன்னு லாரிய வேகமா ஓட்டிட்டு வந்திருக்கான். சாங்கி பதறிப் போயி ஓடப் பார்த்து, பதட்டத்துல மறுபடியும் வண்டி வர்ற வழிக்குள்ளேயே வந்து விழுந்துடுச்சாம். சட சடன்னு ஒடம்பு மேலயே ஏறி எல்லாம் ஒரு நிமிஷத்துல முடிஞ்சு போச்சு. காலையில பால் வாங்கக் கடையத் திறக்கறப்பதான், காப்பரேசன்காரங்க வந்து அள்ளிக்கிட்டுப் போனாங்க. மத்ததெல்லாம் வாட்சுமேன்தான் டியூட்டி முடிஞ்சு போகும்போது வந்து சொல்லிட்டுப் போனாரு.
எனக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்து நொறுங்குவது போல இருந்தது. கண்களில் நீர்ப்படலம் மறைக்க, தொண்டை அடைத்துக் கொண்டது.
திரும்பி அந்த ஜீவராசிகளின் இருப்பிடத்தைப் பார்த்தேன். பிதுங்கிய நிலையில் இருந்த பையில் நான் கொடுத்த சட்டைகள் சுருட்டித் திணிக்கப்பட்டிருந்தது. சாங்கியின் நாய் தலையை மட்டும் மேலே தூக்கி சன்னமான குரலில் கத்திக் கொண்டிருந்தது. சேட்டு பக்கத்தில் போகாமல் தூரத்தில் நின்று குச்சியைக் காட்டி விரட்டிக் கொண்டிருந்தான்.